தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீயை அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ். புரத்தில் ராஜேஷ்குமார் அகர்வால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்காநல்லூர் பகுதியில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் பழைய பஞ்சு குடோன் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த குடோனில் சூப்பர்வைசராக பணியாற்றிய உமா மகேஸ்வரி என்பவர் இரவில் பணி முடித்துவிட்டு குடோனை மூடி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்த பழைய பஞ்சு குடோனில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளிவர ஆரம்பித்தது. இதனையடுத்து சிங்காநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்து விட்டனர்.
அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கோவை தெற்கு, சூலூர், பீளமேடு போன்ற பகுதிகளிலிருந்து வந்த 15 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். மேலும் இரவு நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.