அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்தால் அவர்கள் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் நாளை தமிழகத்திற்கு வர இருப்பதால், அரசியலில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று அனைத்து தரப்பினரும் குழப்பத்தில் உள்ளனர். மேலும் சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் அமைச்சர்கள் சிலர் சசிகலாவிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரான வைகைசெல்வன் சசிகலாவை சந்திப்பவர்கள் அதிமுக கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்று கூறியிருப்பது அதிமுக அமைச்சர்கள் இடத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.