சென்னை தாம்பரத்தில் பிரிட்ஜ் வெடித்ததில், நன்கு உறங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அருகே சேலையூரை சேர்ந்தவர் பிரசன்னா. இவர் நியூஸ் ஜே தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் நள்ளிரவு நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அவருடன் மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் வீட்டில் பூஜை அறையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக அங்கிருந்த பிரிட்ஜ் வெடித்தது. இதனால் தீ வீடு முழுவதும் பரவியது. தீ வீடு முழுவதும் பரவி புகை மண்டலமாக மாறியதால் அவர்கள் மூவரும் வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு மூவரும் உயிரிழந்தனர்.
வீடு சாலையில் இருந்து உள்புறம் தொலைவில் இருந்ததால் தீப்பற்றியது யாருக்கும் தெரியவில்லை. அதிகாலை அவ்வழியாக நடந்து சென்ற மக்கள் வீட்டிலிருந்து புகை வெளியேறுவதை கண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்பதற்கு வீட்டின் உள்ளே சென்றனர். ஆனால் அவர்கள் மூவரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் சோகமடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.