தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் ஆசிரியர்களும் இருப்பின் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு வேலையாக பள்ளிகள் இயங்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக வகுப்பறைகள் தேவைப்படும்போது ஆய்வகம், நூலகம் மற்றும் கூட்ட அரங்கம் போன்றவைகளைப் பயன்படுத்தியும் முழுநேரமாக செயல்படலாம் என்று குறிப்பிட்டுள்ளது.