திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியை காதலன் கத்தியால் சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொண்ணைரஜபுரம் பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்துவருகிறார். இவர் ரேஸ் கோர்ஸில் உள்ள ஒரு தனியார் காபி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் இவரது உறவினரான 19 வயது கல்லூரி மாணவியும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வர இருவரின் பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதித்து விரைவில் அவர்களுக்கு திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் செல்வபுரம் தில்லை நகரில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு அந்தக் கல்லூரி மாணவி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த விஷ்ணு கல்லூரி மாணவியை உறவினர்கள் மத்தியில் தனக்கு விரைவில் திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார்.
ஆனால் அந்த கல்லூரி மாணவி திருமணம் செய்து கொள்வதில் தற்போது தனக்கு விருப்பம் இல்லை என்றும், தான் சினிமாவில் நடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த விஷ்ணு அந்த வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அந்த மாணவியின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகிலிருந்தவர்கள் அந்த மாணவியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செல்வபுரம் போலீசார் மாணவியை கத்தியால் வெட்டிய விஷ்ணுவை கைது செய்து அதன் பின்னர் அவரை சிறையில் அடைத்து விட்டனர்.