பத்து மாதங்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் கோவிலில் உள்ள தீர்த்தக்கிணறு திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அதோடு கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த கோவிலில் உள்ள தீர்த்தக்கிணறு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக திறக்கப்படாமல் கிடந்துள்ளன. இதனால் இந்த தீர்த்த கிணறுகளை நம்பி வாழும் யாத்திரை பணியாளர்கள் தமிழக அரசிடம் இந்த தீர்த்த கிணறுகளை திறக்கக்கோரி வலியுறுத்தினர்.
இந்நிலையில் தமிழக அரசு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள தீர்த்தக்கிணறுகளை திறக்கவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் தீர்த்தமாடலாம் என்றும் அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கோவில் பகுதியில் தொழில் நடத்தும் வியாபாரிகளும், யாத்திரை பணியாளர்களும் மகிழ்ச்சியோடு தங்களது வரவேற்பை அளித்துள்ளனர். இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறும்போது, தமிழக அரசு இந்த கோவிலில் உள்ள தீர்த்தக்கிணறுகளை திறக்க அனுமதி அளித்ததோடு, கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தீர்த்தமாடலாம் என்று கூறியுள்ளனர். இதனால் பக்தர்கள் செல்வதற்கு ஏற்றவாறு தீர்த்தக்கிணறு செல்லும் பாதைகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.