கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், மிக நீண்ட அளவிலான பொது ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொழில்கள், வேலைவாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவு முடங்கி, பொருளாதார சரிவு ஏற்பட்டு, பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய இருக்கிறார். இது நாட்டின் முதல் டிஜிட்டல் நிதி நிலை அறிக்கை ஆகும்.
நிதி நிலை அறிக்கையின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் உடனடியாக தாக்கல் செய்யப்பட்டு, அரசின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கங்களில் வெளியிடப்படயிருக்கிறது. இதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் நிதி அமைச்சக அலுவலகத்தில் இருந்து மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய புறப்பட்டனர். அதற்கு முன்னதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை மரபுப்படி சந்தித்தனர்.