சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விடுதலை இந்த மாதம் 27ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சசிகலாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் சிறையில் உள்ள உறவினர் இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.