அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்தால் மட்டுமே கொரோனாவால் ஏற்படும் உயிர்ப்பலிகளை தடுக்க முடியும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். பதிவியேற்ற சில நிமிடங்களிலேயே வெள்ளை மாளிகையில் உள்ள அலுவலகத்தில் தனது பணிகளை உடனடியாக தொடங்கினார். மேலும் ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்த சில முக்கிய கொள்கைகளை மாற்றியமைத்தார்.
மேலும் அவர் முதன்முதலில் கொரோனா நோய்தடுப்பு பணிகளில் மத்திய அரசின் நடவடிக்கையை அதிகரிப்பு தொடர்பான உத்தரவில் கையெழுத்திட்டார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அடுத்த 100 நாட்களுக்கு பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று ஜோ பைடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,” இன்று முதல் ஏப்ரல் மாதம் வரை அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மாஸ்க் அணிவதன் மூலம் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேரின் உயிரையாவது காப்பாற்ற முடியும். எனவே அமெரிக்க மக்கள் அனைவரும் அடுத்த நூறு நாட்களுக்கு கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்” என்று கூறியுள்ளார்.