சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 83 பேர் கொல்லப்பட்டதுடன் 160 பேர் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியது.
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் 2003ஆம் ஆண்டிலிருந்து டர்பர் மாகாணத்தை மையமாகக்கொண்டு உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசு படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்கள் நடத்திய இந்த உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமைதி ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது.
இதனால் பல ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் டர்பர் மாகாணத்திலுள்ள கிளர்ச்சியாளர்களும் அரசு படையினரும் அமைதி ஒப்பந்தத்தை மீறி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மசாலிட் கோத்திரத்தை சேர்ந்த ஒருவர் அரபு இனத்தைச் சேர்ந்த ஒருவரை கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் இரு இனத்தினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கிளர்ச்சியாளர்கள், டர்பர் மாகாணத்தில் உள்ள EI Geneina பகுதியை சுற்றிவளைத்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் பொது மக்கள் 83 பேர் கொல்லப்பட்டதுடன் 160 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.இதற்கிடையே கிளர்ச்சியாளர்களின் அடுத்த தாக்குதலுக்கு அகதிகள் முகாம் ஒன்றும் இலக்காகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.