நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது, குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள குருவியான்பள்ளம் கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இளைய மதுக்கூடம் கிராமத்தில் வசிக்கும் தனது மகள் அமலா கிருஷ்ணகுமார் வீட்டிற்கு சென்று பொங்கல் சீர்வரிசை பொருட்களை கொடுத்து விட்டு அங்கிருந்து தனது பேரனான ஆக்ரிஷ் என்பவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அந்த சிறுவன் தனது தாத்தா வீட்டின் அருகே உள்ள குளம் பகுதியில் மற்ற சிறுவர்களுடன் இணைந்து விளையாடி கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சிறுவன் தவறி குளத்திற்குள் விழுந்துவிட்டான்.
இதனால் தண்ணீரில் மூழ்கிய சிறுவன் மூச்சு விட முடியாமல் இறந்து விட்டான். இச்சம்பவம் குறித்து புதுப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.