மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாகனங்களை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மற்றும் கால்களில் முழுமையாக வலுவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு, அதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது என அறிவித்துள்ளார். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாட்களில் கால்கள் முழுமையாக வலுவில்லாத மற்றும் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பெற்று கொண்டு இதனை பூர்த்தி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
அந்த விண்ணப்ப படிவத்துடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை போன்றவற்றை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு வருகின்ற 20ஆம் தேதி வரை நேரடியாகவோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார். எனவே மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.