உள்துறை அமைச்சர் அமித்ஷா காவலர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதையடுத்து அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு இலாக்கா ஒதுக்கப்பட்டது.
இதன்படி அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அமித்ஷா, நேற்று முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் அமைச்சக உயரதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்துறை அமைச்சகம் முன் உள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக காஷ்மீர் ஒழுங்கு நிலவரம் பற்றி அம்மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக்கிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள காவலர் நினைவிடத்திற்கு சென்று அமித்ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவர் காவலர் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். அவ்விடத்திற்கு ஏராளமான கட்சி தொண்டர்களும் வந்திருந்தனர். இந்த அருங்காட்சியகத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.