அரசியல் கட்சி தொடங்க மாட்டேன், அரசியலுக்கு வரமாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டிசம்பரில் கட்சி அறிவிப்பு, ஜனவரியில் அரசியல் கட்சி தொடக்கம் என்று பரபரப்பான அறிவிக்கை வெளியிட்டு, உடல்நலம் காரணம் கருதி இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று பின்வாங்கினார். இது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள், அவர் அரசியலுக்கு ரஜினி வரவேண்டுமென போராட்டம் நடத்தினர்.ரஜினி மக்கள் மன்ற உத்தரவையும் மீறி ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் நடத்திய நிலையில் இன்று ரஜினிகாந்த் ஏதேனும் அறிக்கை வெளியிடுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரஜினி சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தனது ட்விட்டரில் ரஜினி சார்பில் வெளியான அறிக்கையில், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு….நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.
கட்டுப்பாடுடன் கண்ணியத்துடன் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுக்கள். இருந்தாலும் தலைமை உத்தரவை மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
நான் இப்போது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை விரிவாக விளக்கியுள்ளேன். தயவு கூர்ந்து நான் அரசியலுக்கு வர வேண்டும் என யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.