நேற்று நடைபெற்ற மோடியின் பதவி ஏற்பு விழாவில் மத்திய அமைச்சரவையில் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர் இடம் பெறவில்லை.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார். இதில் அவருடன் சேர்த்து பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்களுடன் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா_வும் பதவி ஏற்றார். ஆனால் கடந்த அமைச்சரவையில் இடம் பெற்ற சிலர் இந்த முறை அமைச்சராகவில்லை.
அருண் ஜெட்லி :
முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லிக்கு சமீப காலமாக உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி அமைச்சரவையில் முக்கியப் புள்ளியாக இருந்த அருண் ஜெட்லி அமைச்சரவையின் அதி முக்கிய முடிவுகளை வெளியிடுபவர் ஆவார். 66 வயதான இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதனால் இவர் இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார்.
சுஷ்மா சுவராஜ் :
முந்தைய ஆட்சியில் இந்தியா_வின் வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா இருந்தார். இன்றைக்கு நடைபெற்ற புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் அவர் பார்வையாளராக மட்டுமே கலந்து கொண்டார். 67-வயதாகும் சுஷ்மா சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமான மத்திய அமைச்சராக இருந்து வருகின்றார். ட்விட்டர் மூலம் அவரிடம் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் சுஷ்மா இந்த செல்வாக்கை தக்க வைத்துள்ளார்.
ராஜ்யவர்தன் ரத்தோர் :
முன்னாள் ராணுவ வீரரான ராஜ்யவர்தன்ரத்தோர் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் போட்டியிட்டு 2-வது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சூட்டில் பதக்கம் வென்றவரான ரத்தோர் கடந்த பாஜக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வந்தார். 49-வயதான இவருக்கு இந்த முறை ஆட்சியில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை.
ஜெயந்த் சின்ஹா:
பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா_வின் மகனான ஜெயந்த் சின்ஹா_வுக்கு பாஜகவின் முந்தைய ஆட்சி காலத்தில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சராக இருந்த ஜெயந்த் சின்ஹா_வுக்கு தற்போது அமைச்சர் பொறுப்பு வாங்கப்படவில்லை. முதலில் அவர் கடந்த ஆட்சியின் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார். பின்னர் அவருக்கு விமானப் போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது.
ஜே.பி. நட்டா :
ஜெயப் பிரகாஷ் நட்டா என்ற ஜேபி நட்டா இவர் கடந்த ஆட்சியின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். இமாச்சல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட நட்டாவுக்கு இம்முறை மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. இவர் தான் பாஜகவின் அடுத்த தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.