தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களுடன் வரும் 8ம் தேதி வரை கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு எதிர்கொள்ள ஏதுவாக, மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்பதால், பள்ளிகளைத் திறப்பது குறித்து வரும் 8ம் தேதி வரை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் 10, 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிகளின் வசதிக்கேற்ப நடத்தப்பட வேண்டுமென, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எடுக்கப்படும் கருத்துகளின் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பு குறித்து அரசால் முடிவெடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கருத்துக் கேட்பு கூட்டத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.