மூதாட்டியை தாக்கிவிட்டு நகை மற்றும் பணத்தை பறித்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சேரபனஞ்செரி நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காசாம்பூ என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருடைய மகள் துளசி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் துளசி அவரது தாயை பார்க்க நாவலூர் குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு காசாம்பூ சமையலறையில் தலையில் காயத்துடன் மயங்கி கிடந்த நிலையில் இருந்ததை கண்டு துளசி அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து மூதாட்டியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக துளசி அழைத்து சென்றார். இச்சம்பவம் குறித்து விசாரித்த போது காசாம்பூவின் வீட்டின் அருகில் வசிக்கும் ஷாலினி என்ற இளம் பெண் அவரை கட்டையால் அடித்து அவரிடமிருந்த மூன்றே முக்கால் பவுன் நகை மற்றும் 10 ஆயிரத்தை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து ஷாலினியின் மீது வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.