கன்னியாகுமரியில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனையடுத்து கடல் பகுதியில் காற்றின் வேகமும், கடல் அலைகளும் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே காணப்பட்ட போதிலும், விவேகானந்தர் பாறைக்கு மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து கடற்கரை பகுதிகளான வாவத்துறை புதுக்கிராமம், சிலுவை நகர், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, சின்னமுட்டம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. எனவே 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலும், 2000-க்கும் மேற்பட்ட வள்ளம் மற்றும் கட்டுமரங்கள் மேடான பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.