பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில் மோடியே மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். அதன் படி குடியரசு தலைவரும் மோடியை ஆட்சியமைக்க வருமாறு அழைத்திருந்தார். இதையடுத்து வரும் மே -30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்று ஜனாதிபதி மாளிகை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இவ்விழாவில் உலக தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில், பங்கேற்க வருமாறு பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவுக்கு எதிராக கமல் பிரச்சாரம் செய்தார். அதனால் விழா அழைப்பை கமல் ஏற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பது குறித்து கமல்ஹாசன் இன்னும் முடிவு எடுக்கவில்லை என கூறப்படுகிறது.