டெல்லியில் பிரதமர் மோடியை YSR காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வியையடுத்து ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டியை ஆட்சி அமைக்க ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான விழா வருகின்ற 30_ஆம் தேதி பிற்பகல் 12.23 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஆட்சியமைக்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து, வரும் 30-ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது ஜெகன் மோகனுடன் விஜய சாய் ரெட்டி மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்களும் உடனிருந்தனர்.