தமிழகத்தில் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று ரஜினியின் அறிவிப்பால் சிலர் நிம்மதியும், சிலர் வேதனையும் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தான் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். அதுபற்றிய அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு உடல் நலம் தேறி நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. முடிவு பற்றி அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமே தான் தெரியும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த அறிவிப்பால் கழகங்கள் பெயரில் கட்சி நடத்தும் அரசியல் வாதிகள் கொஞ்சம் பெருமூச்சு விட்டுள்ளனர். வலதுசாரி சிந்தனை யாளர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.