Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல் நிலையம் முன் நடந்த கொடூரம்… பதைபதைக்க வைக்கும் பயங்கர சம்பவம்…!!!

சென்னையில் தம்பியை பழிவாங்குவதற்கு அண்ணனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் கண்டுபிடித்தனர்.

சென்னையில் உள்ள திரு.வி.க.நகர் புளியந்தோப்பு டிமலஸ் சாலையில் பேசின்பிரிட்ஜ் காவல்  நிலையம் அருகில் நேற்று மதியம் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, உதவி கமிஷனர் பிரகாஷ், இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், வள்ளி, வேலு மற்றும் போலீசார் பார்வையிட்டு பின்னர் வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்டவர் குறுக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் 4வது தெருவை சேர்ந்த சிலம்பரசன் (35) என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர் கூலி வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் அவருக்கு திருமணமாகி பவானி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.இவருக்கு அன்பரசன் எனும் தம்பி இருந்துள்ளார். அன்பரசன் அப்பகுதியில் மிகப் பெரிய ரவுடியாக வலம் வந்துள்ளார். அன்பரசனுக்கு அதே பகுதியை சேர்ந்த விஜயன் எனும் ரவுடி யுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் விஜயன் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் விஜயனின் முதல் மனைவியின் மகன் பாலசுப்பிரமணியம் (30) என்பவரை அன்பரசன் தனது சகோதரர்கள் இளவரசன், குறளரசன், தென்னரசன் மற்றும் கூட்டாளிகள் மணி, டேவிட், இளவரசனின் மனைவி மல்லிகா ஆகிய 7 பேருடன் சேர்ந்து கடந்த நவம்பர் மாதம் 4 ம் தேதி கொலை செய்தார். அதனால் இவ்வழக்கில் 7 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாலசுப்பிரமணியம் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே விஜயனின் இரண்டாவது மனைவியின் மகன்களான யுவராஜ் மற்றும் அசோக் ஆகியோர் காத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அன்பரசன் அண்ணன் சிலம்பரசன்,புளியந்தோப்பில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு நேற்று வந்து இருந்தார். அச்சமயம் அதை அறிந்த யுவராஜ், அசோக் ஆகியோர் தங்களது 3 கூட்டாளிகளுடன் ஆட்டோவில் வந்து அன்பரசனை  பழிவாங்குவதற்காக அண்ணன் சிலம்பரசனை  சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட சிலம்பரசன் மீது காவல் நிலையத்தில் எந்த வழக்கும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.  பட்டப்பகலில் போலீஸ் நிலையம் அருகே இந்த கொலை சம்பவம் நடந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |