கடன் தொல்லை காரணமாக கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியை சேர்ந்த தம்பதியினர் விக்ரம் என்கிற கோதண்டராமன்- ராஜேஸ்வரி. இத்தம்பதியினருக்கு ஹர்ஷிதா, ரக்ஷிதா என்ற 2 பெண்குழந்தைகள் உள்ளனர் . விக்ரம் அப்பகுதியில் ஸ்டீம் அயனிங் கடை நடத்தி வந்துள்ளார். விக்ரம் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடையை திறக்காமல் இருந்துள்ளார். தனிநபர்களிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனவேதனை காரணமாக அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டதால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் விக்ரம் தவித்துள்ளார். இதனால் மனவேதனையிலிருந்த விக்ரம் நேற்று முன்தினம் விஷ மாத்திரையை சாப்பிட்டு வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் விக்ரமிற்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி விக்ரம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.