சென்னை மெரினா கடற்கரையின் அருகே கட்டிக் கொண்டிருக்கும் ஜெயலலிதா நினைவிட பராமரிப்பு பணிக்காக சிறப்பு அதிகாரி ஒருவரை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் வளாகத்தின் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அங்கு தற்போது ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் ஒன்றை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து ரூபாய் 50.80 கோடி நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர். இரவு பகல் பாராது பணிகள் நடந்து வந்தது .கொரனோ நோய்த்தொற்று காரணமாக பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் நினைவு மண்டபம் அமைப்பதற்காக பீனிக்ஸ் பறவைகான ராட்சத சிறகு மற்றும் அதனைத் தாங்கி நிற்கும் கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் துபாயிலிருந்து கப்பலின் மூலமாக கொண்டுவர பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிட பணிகளுக்காக தமிழக அரசு சிறப்பு அதிகாரி ஒருவரை நியமனம் செய்துள்ளது.
அவர் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜன் ஆவார்.மூன்று மாதங்களுக்குள் ஜெயலலிதா நினைவிடம் கட்டுமான பணியை முடித்து கொடுக்க இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.