தகவல் தொழில்நுட்பத்திற்கான சிஎம்எஸ் one செயற்கைக்கோளை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி – c50 ராக்கெட் நாளை பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது, இதற்கான 25 மணிநேர கவுண்டவுன் தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பூமி கண்காணிப்பு பணிக்காக EOS1 என்ற செயற்கைக் கோள்களையும், தகவல் தொடர்புக்காக சிஎம்எஸ் 1, EOS2 மற்றும் EOS3 என்ற செயற்கைக் கோள்களையும் வடிவமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இதையடுத்து பூமி கண்காணிப்பு பணிக்காக தயாரிக்கப்பட்ட EOS1 என்ற செயற்கைகோள் கடந்த மாதம் 7ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிலையில் தகவல் தொழில்நுட்பத்திற்காக சி.எம்.எஸ் 1 செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் மூலம் நாளை பிற்பகல் 3.41 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது.
1,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ் 1 செயற்கைக்கோள் கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை ஆகிய பணிகளுக்கு தேவையான தரவுகளை வழங்குவதில் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளை ஏவுவதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று பிற்பகல் 2.41 மணிக்கு தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.