கொரோனா பரவல் காரணமாக உணவகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்ஸின் தலைநகரான பாரிசில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக உணவகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உணவகங்களை திறக்க வேண்டும் என, அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அரசு தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் உணவக உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டமானது பிளேஸ் டெஸ் இன்வேலிடேஸ் என்ற பகுதியில் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது. இவர்களுடன் தேனீர் விடுதி உரிமையாளர்களும் இணைந்து ஒட்டுமொத்தமாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதியில் அனைத்து உணவகங்களும் திறக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். இருப்பினும் கிறிஸ்துமஸ் காலங்களில் உணவகங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்க கோரி போராட்டம் நடத்திவருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- “மக்களுக்கு அத்தியாவசியமானது உணவு எனவே நாங்கள் பணிக்கு சென்றாக வேண்டும்” என தெரிவித்தனர்.