சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.
இந்நிலையில் சித்ராவின் உடலை இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பிரேத பரிசோதனையில், சித்ராவின் மரணம் தற்கொலைதான் என்று உறுதியாகியுள்ளது. இறந்து கிடந்த சித்ராவின் முகத்தில் காயம் இருந்தது பெரும் சந்தேகத்தை கிளப்பி இருந்தது. ஆனால் பரிசோதனையில் அவரது கன்னத்தில் இருந்த காயம் சித்ராவின் நகக்கீறல் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சித்ராவின் தற்கொலை பற்றி போலீசார் நடத்தி வரும் விசாரணையில், ஹேம்நாத் சித்ராவின் நடிப்பு தொழில் ஆதிக்கம் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியலில் மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இது அவருக்கு பிடிக்கவில்லை. இதை விரும்பாமல் சித்ராவிடம் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்கொலைக்கு முன் தனது தாயாரிடம் சித்ரா அதிக முறை போனில் பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.