கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜரால் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இது காலப்போக்கில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. தற்போது பள்ளி சத்துணவில் மாணவ-மாணவிகளுக்கு 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. இதில் 1 முட்டையும் வழங்கப்படுகிறது. தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில் ஒரு டம்ளர் பால் வழங்கலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது.
பாலில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவைகள் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது என்று சத்துணவில் காய்கறிகள் முட்டை இவற்றுடன் சேர்த்து தினமும் காலையில் ஒரு டம்ளர் பால் வழங்குவது பற்றி பரிசீலித்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே திட்டம் பரிசீலிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வருவதில் சில சிக்கல்களை காரணம் காட்டி கைவிடப்பட்டது.
இப்போது மீண்டும் பால் வழங்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நடைமுறையில் பாலை கெடாமல் பாதுகாப்பது சிரமமாக இருக்கும். எனவே பால் பவுடரை வாங்கி கலந்து கொடுக்கலாமா என்று யோசித்து வருகிறார்கள். இதிலும் கொள்முதல் முறையாக வழங்கப்படுகிறதா என்ற கண்காணிப்பது அவசியமாகும். எனவே பால் வழங்குதல் திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி பரிசீலித்து வருகிறார்கள்.