அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி மன்றத்தின் அலட்சியப் போக்கால் இளைஞரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் உள்ள சிறு குடிநீர் தொட்டி உள்ளது. இதற்கு கடந்த ஒரு வருடமாக மின் இணைப்புப் பெறாமல் கள்ளத்தனமாக தொரட்டி குச்சி மூலம் மின்சாரம் பெறப்பட்டு, ஸ்விட்ச் பாக்ஸ் அருகில் உள்ள கம்பி வேலியில் வைத்துள்ளனர். கம்பி வேலியில் வயரின் இணைப்பு உரசியதால் வேலி முழுவதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது.
அப்போது அந்த வழியாக சென்ற ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் பாலாஜி சாலை முழுவதும் சேறாக இருந்ததால் வழுக்கி விழாமல் இருக்க அருகிலிருந்த கம்பிகளின் மேல் கை வைத்துள்ளார். உடனே அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து செந்துறை காவல்துறை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மாவட்டத்திற்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செந்துறை ஊராட்சி மன்றத்தின் அலட்சிய போக்கே இளைஞர் பலியான காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.