நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால் மக்களுக்கு இறுதி கட்ட உஷார் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவர் தீவிர புயலாக இருந்த நிலையில் தற்போது அது அதி தீவிர புயலாக வலுப் பெற்றிருக்கிறது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 220 கிலோமீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 90 கிலோமீட்டர் தொலைவிலும் தற்போது நிவர் அதி தீவிர புயலான நிவர் நிலை கொண்டுள்ளது. இது அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என்பதுதான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது இருக்க கூடிய தகவல்.
அதி தீவிர புயலாக கரையை கடக்கும் பட்சத்தில் 120 இல் இருந்து 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். சமயங்களில் 145 கிலோ மீட்டர் வேகம் காற்று வீசுவதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிர புயலாகவே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. வடமேற்கு திசையை நோக்கி 16 கிலோமீட்டர் வேகத்தில் அது நகர்ந்து வருகிறது. முன்னதாக 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகமானது சற்று அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுள்ளது. இதனால் கடலூர் பகுதியில் பலத்த காற்று வீசுகின்றது. புயலின் முக்கிய பகுதி கரையை தொட 5 முதல் 6 மணி நேரம் ஆகும் என சொல்லப்படுகின்றது.