கொரோனாவின் வேகம் அதிகரிப்பதால் அகமதாபாத் மாநகராட்சியில் ஊரடங்கை அமல்படுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் அதை தடுப்பதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கிய பிறகு ஊரடங்கில் இருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்திருந்தது. இந்நிலையில் அகமதாபாத் நகரில் தற்போது கடந்த சில தினங்களாக கொரோனாவின் வேகம் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் மாநில கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் குமார் குப்தா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், “அகமதாபாத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அகமதாபாத் மாநகராட்சி இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அகமதாபாத் மாநகராட்சி முழுவதும் இரவு 9 மணி – காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நடவடிக்கையானது அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான பால் மற்றும் மருந்து விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.