சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில் வசிப்பவர் ஜீவா. இவருடைய (வயது 28). இவர் வேன் டிரைவராக வேலை செய்கிறார். இவரும் சேலம் தாதம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி (வயது 23 ) என்பவரும் கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்த தம்பதிகளுக்கு 1½ வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் கணவர் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு கலைச்செல்வி வெளியில் ஓடி வந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை விரைவாக அணைத்து அவரை மீட்டனர்.
பின்பு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மகளின் இந்த நிலைக்கு காரணமான ஜீவா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலைச்செல்வியின் பெற்றோர் இந்திராணி மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.மேலும் கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் மனு போட்டனர். அதில் திருமணம் ஆனதில் இருந்தே எனது மகளை அவரது கணவர் ஜீவா அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார்.

மேலும் அவருக்கு கூடுதலாக 5 பவுன் தங்க நகை மற்றும் சீர் வரிசை பொருட்களை கொடுத்துள்ளேன். ஆனாலும் அவர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார் என குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் ஜீவா மீது கூடுதல் வரதட்சணை கொடுமை மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.