தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி 7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, ஏழு பேர் விடுதலைக்கு ஆளுநருக்கு திமுக உள்பட அரசியல் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இது குறித்து இவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம் தான் என்றும், அவர்களை விடுவித்தால் சிறைச்சாலைகளில் 25 ஆண்டுக்கும் மேலாக இருக்கும் தமிழ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழும் என்று கூறியுள்ளார்.
நீதிமன்றம் 7 பேர் விடுதலையை அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். மேலும் கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்று தான் கூற வேண்டுமே தவிர அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல என்றும், பெருமதிப்பிற்குரிய காமராஜர் அப்துல் கலாம் ராமானுஜர் கருணாநிதி அண்ணா போன்றவர்களை தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது என்று கூறினார். குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று இயக்கம் ஆரம்பித்தால் காவல்நிலையம் வேண்டாம், நீதிமன்றம் வேண்டாம், சட்ட ஒழுங்கை பற்றி பேசவேண்டாம் என்பது பொருளாகும்.
எனவே, முன்னாள் பிரதமரை கொலை செய்து இந்தியாவிற்கு கேடு விளைவித்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது என்று அவர் கூறியுள்ளார்.