தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பரவலைத் தடுக்க கூடிய வகையில் தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவித்திருந்தார்.
ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு இது சரியான தருணம் இல்லை என்று பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு தேதி தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக பல்வேறு தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கொரோனா பரவல் மற்றும் பருவமழை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.