பொதுமக்களின் புகைப்படம் மற்றும் ரேஷன் கார்டு நகலை வைத்து 6.30 கோடி ரூபாய் வரை பணம் மோசடி செய்ததாக தே.மு.தி.க பிரமுகர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கடம்பூர் தெற்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் சிவம் ராஜேந்திரன் மற்றும் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தரகம்பட்டியில் உள்ள மக்களிடம் கடந்த 2013-ல் தேமுதிகவில் உறுப்பினராக சேர்ப்பதாக கூறி பொதுமக்களிடம் புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை நகலை பெற்றுள்ளனர். இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை தொடங்கி போலி நகைகளை அடமானம் வைத்து சுமார் 6.30 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இருவரும் முன் ஜாமினில் வெளியில் நடந்து வருவதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.