சென்னை கோயம்பேடு சந்தையில் சிறு குறு சில்லரை வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படாததால் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகத்தில் ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இல்லங்கள் அலுவலகங்களில் மலர்கள், பழம் வகைகள், வாழை கன்று, மாவிலைத் தோரணம், மஞ்சள் கிழங்கு, அவல், பொரி என இறைவனுக்கு படைப்பது வழக்கம். இவை அத்தனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் கோயம்பேடு சந்தையையே அதிகம் நாடுவர். இந்த ஆண்டு கொரோனா பரவல் அச்சம் காரணமாக கோயம்பேடு சந்தையில் சிறு குறு கடைகள் மூடப்பட்டு சுமார் 200 மொத்த காய்கறி அங்காடி மட்டுமே செயல்பட்டு வருகிறது.
ஆயுத பூஜைக்கு முதல்நாள் எப்போதும் கூட்டம் களை கட்டும் கோயம்பேடு சந்தை இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் சிறு குறு சில்லரை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.