விஜய்யை நாளைய தமிழக முதல்வர் என்று குறிப்பிட்டு போஸ்டர் அடித்து ஒட்டியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரபல இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் பேட்டியளித்த போது மக்கள் அழைத்தால் விஜய் அரசியலுக்கு வருவார் என்றும் தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தின் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய்யை அடையாளப்படுத்தி நாளைய முதல்வர் என்று போஸ்டர்கள் சுவர் எங்கும் ஒட்டப்பட்டுள்ளன. அதோடு அந்த போஸ்டரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி புகைப்படங்களின் வரிசையில் விஜய்யின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தின் முன் விஜய் இருப்பது போன்று அந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு “1991 முதல் 2016 வரை இரண்டு பெரும் தலைவர்களை சட்டமன்ற தேர்தலில் பார்த்த தமிழகத்தில் தற்போது வெற்றிடத்தை நிரப்புவதற்கு வருக இளம் தலைவரே, நாளைய தமிழக முதல்வரே, 2021 ஆட்சி உங்கள் தலைமையில் அமையட்டும். தமிழகம் முழுவதும் மகிழ்ச்சியில் மலரட்டும்” என்ற வாசகங்களையும் போஸ்டரில் அச்சடித்துள்ளனர். எஸ்.ஏ.சந்திரசேகர் புகைப்படமும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்கள் அழைத்தால் விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது தந்தை கூறியிருந்த நிலையில் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி அழைப்பு விடுத்துள்ளனர்.