தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கும் குடிநீர் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஏழைகளுக்கு குடிநீர் வழங்காத நிறுவனங்களை மூடலாம் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவை வெறும் 143 நிறுவனங்கள் மட்டுமே செயல் படுத்தியதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக இயங்கும் குடிநீர் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது குறித்து வரும் நவம்பர் மாதம் 19ம் தேதிக்குள் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவுபடி 15 சதவீத குடிநீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆலைகள் ஏன் இலவசமாக வழங்க வில்லை? ஏன் மக்களுக்கு குடிநீர் வழங்காத நிறுவனங்களை மூடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் நிலத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவை கணக்கிடும் கருவிகள் பொருத்துவதற்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.