தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,569 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக, தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 477 ஆக உயர்ந்து விட்டது.
நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 66 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் 30 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 36 பேர் அரசு மருத்துவமனைகளிலும், மரணமடைந்ததாக தமிழக சுகாதாரத் துறையின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,751 ஆக அதிகரித்துவிட்டது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 987 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 624 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் நேற்று 565 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 293 பேருக்கும், சேலத்தில் 286 பேருக்கும், கடலூரில் 289 பேருக்கும், திருவள்ளூரில் 282 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.