கண்டலேறு அணையில் இருந்து இன்று இரவு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது என ஆந்திர மாநிலம் தெரிவித்துள்ளது.
வருடம்தோறும் தமிழகத்திற்கு 12 டிஎம்சி நீரை ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து சாய் கங்கை கால்வாயில் திறப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் நடப்பாண்டில் 8 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 டிஎம்சி நீரை கணக்குப்படி பார்த்தால் ஜூலையில் திறந்திருக்க வேண்டும்.
ஆனால் கண்டலேறு அணையில் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்தப்பிரச்சினை குறித்து ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் காரணமாக, 14ம் தேதி முதல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியவாறு, இன்று இரவு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது.