3டி தொழில்நுட்பம் மூலம் நடந்த பட்டமளிப்பு விழாவை பாராட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால் மாணவர்களுக்கும், ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2019-20 ஆம் கல்வி ஆண்டில் படிப்பை முடித்த இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நாடு முழுவதும் நடைபெறாமல் இருக்கிறது.
இந்நிலையில் மும்பை ஐஐடியில் 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடந்த பட்டமளிப்பு விழா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொரோனாவால் விழா நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சுமார் 2000 மாணவர்களின் அவதார உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியை பாராட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.