Categories
தேசிய செய்திகள்

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு… தீர்ப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு…சுப்ரிம் கோர்ட்…!!!

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்க ஒரு மாத கால அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் மாதம் ஆறாம் தேதி 1992 ஆம் வருடம் அயோத்தியில் ராமர் கோயில் அமைந்திருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டிருப்பதாக கூறி, கர சேவகர்கள் அதனை தரைமட்டமாக்கினர். அது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், சாத்வி ரிதம்பரா, வினய் கட்டியார் உள்ளிட்டவர்கள் மீது உத்திரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருக்கின்ற சிபிஐ தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது.

அந்த வழக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விசாரணை செய்து தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த மே மாதம் எட்டாம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதன்பிறகு அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேரிடம்  குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 313-ன் கீழான விசாரணையை சிபிஐ தனி நீதிமன்றம் நடத்தி முடித்துவிட்டது. அதேசமயத்தில் வழக்கு தொடர்பான விசாரணையை முடித்து, தீர்ப்பு வழங்குவதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என சிபிஐ தனி நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், சுப்ரீம் கோர்ட்டுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

அதனை பரிசீலனை செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆர்.எப். நாரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் உள்ளடங்கிய அமர்வில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க சிபிஐ தனி நீதிமன்றத்திற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையின் தீர்ப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |