அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகின்றார். ஜோ பிடன் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் கொரோனா காரணமாக அவரை அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது காலதாமதம் ஏற்பட்டு கொண்டிருந்தது.
இந்நிலையில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. காணொலிக் காட்சி மூலமாக நடந்து கொண்டிருக்கும் அந்த மாநாட்டில் நேற்று ஜோ பிடன் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.இதுபற்றி ஜோ பிடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான ஜனநாயக கட்சியின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வது எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய மரியாதை” என்று பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஜோ பைடன் இன் மனைவி ஜில் பைடன் இதுகுறித்து கூறும்போது, ” இந்த தேசத்தின் இதயம் இன்னும் கருணை மற்றும் தைரியத்துடன் துடிக்கின்றது என்பதை நாம் காட்டியுள்ளோம். நமது தேசத்திற்கு தகுதியான தலைமை தேவை. உங்களுக்கு தகுதியானவர்” என்று அவர் கூறியுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.