தருமபுரியில் கட்டிட வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் பலியாகினர்.
தருமபுரி மாவட்டம் அருகே கட்டிட தொழிலாளர்களை வேலைக்கு ஏற்றி சென்ற சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். குளியனூரிலிருந்து- ஏரியூருக்கு கட்டிட தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. இதில் சிமெண்ட் மற்றும் கற்களை கலக்கும் கலவை எந்திரமும் ஏற்றப்பட்டிருந்தது.
குமாரசாமிப்பேட்டையின் மேம்பாலம் அருகே மின்னல் வேகத்தில் சரக்கு லாரி சென்ற போது கலவை எந்திரத்தின் அதிக எடை காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தானது சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இந்த கோர விபத்தில் குளியனூரை சேர்ந்த கலா என்பவரும், கோம்பையை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரும் பலியாகினர். இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சட்டத்திற்கு புறம்பாக சரக்கு லாரியில் ஏராளமான ஆட்களை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணமாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து போக்குவரத்துக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.