மழை வெள்ளத்தால் சாலை மூழ்கியதால் டிராக்டரில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீஸ் செயலை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக பல்வேறு சாலைகளில் அரிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மஞ்சேரியல் மாவட்டம் சென்னூர் அருகே உள்ள கிராமத்தில் குளம் நிரம்பியதால், ஓடையில் உள்ள நீர் பெருக்கெடுத்து சாலைகள் முழுவதும் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கிராம மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவத்திற்காக சென்னூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், சாலை மூழ்கி உள்ளதால் அவர்களால் கர்ப்பணிப் பெண்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் ஒரு டிராக்டரில் ஏற்றி கொண்டு நீர் சூழ்ந்த சாலை வழியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசாரின் இந்த உதவியை கண்டு கிராம மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.