Categories
உலக செய்திகள்

அமெரிக்க வீரர்கள் முழுமையாக திரும்புவார்கள்… ” நாங்க கேரண்டி”… நம்பிக்கை அளித்த தலிபான் அமைப்பு…!!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க வீரர்கள் முழுமையாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 19 வருடங்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்க அரசு சென்ற பிப்ரவரி மாத கடைசியில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஒன்றை நடத்தியது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் அதனைச் சார்ந்த நட்பு நாடுகள் மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு கைமாறாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்களை முழுமையாக திரும்ப பெற அமெரிக்கா உத்தரவாதம் கொடுத்தது. அதன் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை  குறைக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா செய்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் உள்ள தனது படை வீரர்களை அமெரிக்கா முழுமையாகத் திரும்பப் பெறும் என தலீபான் பயங்கரவாத அமைப்பு நம்பிக்கை கொடுத்துள்ளது. இது பற்றி தலீபான் பயங்கரவாத அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான செய்தி தொடர்பாளர் சுஹைல் சாஹீன் கூறியதாவது: “ஆம் அவர்களால் முடியும். தேர்தலுக்கு முன்பு அவர்கள் விலகினால் அது அவர்களுக்கு நல்லது என்று நினைக்கிறேன். ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு ராணுவம் தீர்வாக இருக்க முடியாது.

இதனால், ஆப்கானிஸ்தானில் புனரமைப்பு மற்றும் நாட்டின் மறுவாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் பங்கேற்பதை நாங்கள் வரவேற்போம். ஆனால் அதற்குமுன் அவர்கள் விரைவில் தங்கள் ராணுவ பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் அதை செய்தால் நாங்கள் வரவேற்போம். பாராட்டுவோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்னர் நவம்பர் மாதத்திற்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை 4 ஆயிரமாக குறைக்க முடிவு செய்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |