கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிய தேயிலை தோட்ட தொழிலாளர்களில், 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. இதில் காந்திராஜ் (48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாதுரை (44), ராஜேஸ்வரி (43) ஆகிய 9 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 52 பேர் தொடர்ந்து மீட்பு பணிகளைை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தொடர் மழையால் மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இருந்தும் இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கு முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து மாநில காவல்துறையும், தீயணைப்பு துறை வீரர்களும் ஈடுபட பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இரவிலும் மீட்பு பணிகளை தொடர்ந்து செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.