#boycottIPL என்ற hashtag சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த மாதம் லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்களில் சிலர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய மக்கள் சீன பொருட்களை புறக்கணிப்போம். சீன செயலிகளை உபயோகிப்பதை நிறுத்துவோம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து boycottchineseproduct என்ற குறிக்கோளை முன்னிறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீன பொருட்களை உடைத்து நொறுக்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவின் மீது இத்தனை எதிர்ப்பையும் காட்டிய இந்திய மக்கள், தற்போது நேரடியாக சீன நிறுவனம் இந்தியாவின் கிரிக்கெட் அணிக்குள் நுழைந்துள்ளதை எதிர்க்க தயங்குவதாக சமூக வலைதளங்களில் boycottIPL என்ற hashtag மூலமாக கருத்துக்கள் பரவி வருகின்றன. அதன்படி,
லடாக் தாக்குதலை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் இருந்து சீன நிறுவனமான விவோ ஸ்பான்சரை நீக்க இந்தியா முழுவதும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல், இந்த ஆண்டும் ஐபிஎல் ஸ்பான்சராக விவோ நீடிக்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதை கண்டிக்கும் விதமாக சீன பொருட்களை எதிர்க்கத் துணிந்த மக்கள், ஐபிஎல் ஆதரித்த இந்த ஸ்பான்சர் முடிவை எதிர்த்து குரல் கொடுக்க மறுப்பது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகள் boycottIPL என்ற hashtag மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.