கொரோனா பரவலுக்கு மத்தியில் ராமர் கோயில் பூமிபூஜை தேவையா? என ராஜ்தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை வருகின்ற ஐந்தாம் தேதி நடக்கவிருக்கிறது. அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை தேவை இல்லை என்று மராட்டிய நிவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “மக்கள் அனைவரும் தற்போது வேறுபட்ட மனநிலையில் இருக்கின்றனர். இவ்வாறான நேரத்தில் பூமி பூஜை தேவையில்லை. தற்போது உள்ள நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இதனை நடத்தி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.
கொரோனா பாதிப்பால் மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். அவர்களை அதிலிருந்து வெளியேற உதவுவது அவசியம். இங்கு மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொலைக்காட்சி சேனல்களிலும் மற்றும் பல்வேறு சமூக ஊடகங்களிலும் வெளிவருகின்ற செய்திகள் மக்கள் குழப்பத்திற்கு வழிவகுக்கின்றன. மக்கள் நிம்மதியாக உள்ளதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.மேலும் மாநிலத்தில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார சரிவினை மீட்பதற்கு அரசு வலுவான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.