கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நடிகை ஐஸ்வர்யாரய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி கலந்த உருக்கமான பதிவு ஒன்றை ரசிகர்களுக்காக பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 11-ம் தேதி அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 10 நாட்கள் சிகிச்சை பெற்ற பின் ஐஸ்வர்யாராய், ஆராத்யா இருவரும் ஜூலை 27-ம் தேதி குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வந்த நடிகை ஐஸ்வர்யாராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை பதிவிட்டிருந்தார். அதில், “எனது குடும்பத்தினர் நலம் பெற நீங்கள் காட்டிய அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. உங்களுக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். உங்களின் இந்த அன்பைக் கண்டு எனது இதயம் கரைந்துவிட்டது. மிக்க நன்றி” என்று கூறி கையெடுத்து வணங்குவது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.